பணக்கார நாடுகள் அகதிகள் குறித்த பொறுப்புகளைத் தட்டிக்கழிக்கின்றன: அம்னெஸ்டி இன்டர்நேஷனல்
உலகின் பணக்கார நாடுகள் அகதிகள் குறித்த தங்களது பொறுப்புகளைத் தட்டிக்கழிப்பதை மனித உரிமை அமைப்பான அம்னெஸ்டி இன்டர்நேஷனல் கடுமையாகக் கண்டித்துள்ளது. அந்த நாடுகள் மிகக் குறைந்த அளவில் அகதிகளுக்கு அடைக்கலம் கொடுப்பது மற்றும் குறைந்த அளவில் அவர்களுக்குத் தேவையானவற்றை அளிப்பது போன்றவற்றை அது விமர்சித்துள்ளது.

பட மூலாதாரம், BULENT KILIC/AFP/Getty Images
பணக்கார நாடுகள் ஒவ்வொன்றும் தங்களது நாட்டின் பரப்பளவு, செல்வம் மற்றும் வேலையின்மை விகிதம் போன்றவற்றிற்கு ஏற்ப அகதிகளை ஏற்றுக்கொள்ளாத வரை, இந்த நிலை மோசமாகும் என அம்னெஸ்டி இன்டர்நேஷனலின் பொதுச் செயலாளர் சலீல் ஷெட்டி கூறினார்.

பட மூலாதாரம், RONALDO SCHEMIDT/AFP/Getty Images
உலகின் மொத்த 21 மில்லியன் அகதிகளில் பாதிக்கும் மேற்பட்டோர் வெறும் பத்து நாடுகளில்தான் தங்கவைக்கப்பட்டுள்ளனர் என்று அந்த அமைப்பு ஒரு அறிக்கையில் கூறியிருக்கிறது.
இந்தப் பட்டியலில் முதலில் உள்ளது ஜோர்டான் . எட்டு மில்லியனுக்கும் குறைந்த மக்கள் தொகை கொண்ட இந்த நாட்டில் ஆறு லட்சத்திற்கும் மேற்பட்ட சிரிய நாட்டைச் சேர்ந்தவர்கள் இருக்க அனுமதிக்கப்பட்டுள்ளனர்




























