கொலம்பிய அரசுக்கும், மற்றொரு கிளர்ச்சிக் குழுவுக்கும் இடையே பேச்சுவார்த்தை
கொலம்பிய அரசுக்கும் அந்நாட்டின் இரண்டாவது பெரிய கிளர்ச்சி குழுவான, தேசிய விடுதலை இராணுவம், அல்லது இ.எல்.என்.(National Liberation Army - ELN) என்று அறியப்படும் அமைப்புக்கும் இடையான சமாதான பேச்சுவார்த்தை இந்த மாத இறுதியில் தொடங்கும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

பட மூலாதாரம், GUILLERMO LEGARIA/AFP/Getty Images)
முதல் பேச்சுவார்த்தை அக்டோபர் 27ம் தேதி எக்வடோரில் நடைபெறும்.
இடதுசாரி கெரில்லாக்களோடு கடந்த அரை நூற்றாண்டாக நடைபெற்ற மோதல்களுக்குப் பின், கொலம்பிய அதிபர் யுவான் மானுவேல் சாண்டோஸ், இ.எல்.என் அமைப்புடன் பேச்சுவார்த்தை நடத்த வாய்ப்பு வழங்கியுள்ளார். நாட்டில் முழுமையான அமைதியை அடைவதை இந்தப் பேச்சுவார்த்தை லட்சியமாகக் கொண்டுள்ளது.
முக்கிய கிளர்ச்சி குழுவானஃபார்க் அமைப்புடன் ஒரு ஒப்பந்தத்தை ஏற்படுத்த, அதிபர் யுவான் மானுவேல் சாண்டோஸ், எடுத்த முயற்சிகளுக்காகக் கடந்த வாரம் அவருக்கு அமைதிக்கான நோபல் பரிசு வழங்கப்பட்டது.
அவர் கொண்டுவந்த ஒப்பந்தத்தை நிறைவேற்றுவதற்கான மக்கள் கருத்தறியும் வாக்கெடுப்பில், வாக்காளர்கள் அதை நிராகரித்துள்ளனர். ஆனால் சாண்டோஸ், அந்த ஒப்பந்தத்தின் ஷரத்துக்களை மறுஆய்வு செய்ய முயற்சி எடுத்து வருகிறார்.




























