ஹிலரியின் மின்னஞ்சல் விவகாரம்: முழு தகவல்களையும் வெளியிட ஜனநாயக கட்சியின் செனட் உறுப்பினர்கள் கோரிக்கை

பிரசுரிக்கப்பட்டது

அமெரிக்க ஜனநாயகக் கட்சியின் அதிபர் வேட்பாளரான ஹிலரி கிளிண்டனின் மின்னஞ்சல்கள் குறித்து மீண்டும் விசாரணையை தொடங்க எஃப்.பி.ஐ முடிவு எடுத்ததன் பின்னணியான புதிய மின்னஞ்சல்கள் குறித்து மேலும் அதிக தகவல்களை வரும் திங்கள் கிழமையன்று (நாளை) , அளிக்குமாறு அமெரிக்க மத்திய புலனாய்வு அமைப்பான எஃப்.பி.ஐ மற்றும் அமெரிக்க நீதித் துறைக்கு ஜனநாயக கட்சியின் மூத்த செனட் உறுப்பினர்கள் கடிதம் எழுதியுள்ளனர்.

ஹிலரி கிளிண்டன்

பட மூலாதாரம், Getty Images

படக்குறிப்பு, மீண்டும் விசாரணையை தொடங்க எஃப்.பி.ஐ எடுத்த முடிவை சாடும் ஹிலரி கிளிண்டன்

அமெரிக்க அதிபர் தேர்தலுக்கு இரண்டு வாரங்களுக்கு குறைவாக இருக்கும் தற்போது, இந்த புதிய மின்னஞ்சல்களின் இருப்பு குறித்து வெளிப்படுத்த எஃப்.பி.ஐ அமைப்பின் இயக்குனரான ஜேம்ஸ் கோமி முடிவெடுத்தது அரசியல் நோக்கங்களுக்காக பயன்படுத்தப்பட்டு வருவதாக ஜனநாயக கட்சியின் செனட் உறுப்பினர்கள் வாதிட்டுள்ளனர்.

இந்த விவகாரம் குறித்து மீண்டும் விசாரிக்க எஃப்.பி.ஐ முடிவு எடுத்தது முன்னெப்போதும் இல்லாத வகையில் உள்ளதாகவும், ஆழ்ந்த கவலையளிப்பதாகவும் ஜனநாயக கட்சியின் அதிபர் வேட்பாளர் ஹிலரி கிளிண்டன் தெரிவித்துள்ளார்.

எஃப்.பி.ஐ-யின் இந்த முடிவு குறித்து அதன் இயக்குனர் ஜேம்ஸ் கோமியிடம் அமெரிக்க நீதி துறை அதிகாரிகள் எச்சரித்தாகவும் தகவல்கள் கூறுகின்றன.