தாக்குதல் கணைகளில் இருந்து தப்பி வாழும் நெல்சன் மண்டேலாவின் பேத்தி
தன்னுடைய தாத்தா நெல்சன் மண்டேலாவின் சர்வதேச பிரபல்யத்தின் நிழலில், ஸோலெகா மண்டேலா வளர்ந்தார், இருந்தாலும் அவருடைய வாழ்க்கை சொகுசானது என்ற நிலையில் இருந்து வெகுதொலைவில் அமைந்து விட்டது.

36 வயதே ஆகியிருக்கும் அவர், பாலியல் தாக்குதல் ஒன்றிலிருந்து தப்பித்திருக்கிறார், போதை மருந்து பழக்கத்திற்கு அடிமையாகி திரும்பியிருக்கிறார். அவருடைய இரண்டு குழந்தைகள் இறந்துள்ளன. ஆனால், இவை எல்லாவற்றிலும் இருந்து மீண்டு வந்து இப்போது பிறரின் நல்வாழ்வுக்காக பிரசாரம் செய்து வருகிறார்.
அவர் தன்னுடைய வாழ்க்கை கதையை பிபிசியின் 100 பெண்கள் தொடரில் பகிர்ந்து கொண்டார்.
ஸோலெகாவுக்கு பத்து வயதாக இருந்தபோது, அவருடைய தாத்தா நெல்சன் மண்டேலா சிறையில் இருந்து விடுதலை பெற்றார். சிறையில் அடைக்கப்பட்டிருந்த மனிதராக மட்டுமே ஸோலெகாவுக்கு அவரை பற்றி அதுவரை தெரியும். அவர் வீட்டுக்கு வர இருப்பதை எண்ணி மகிழ்ச்சியடைந்தார்.
உலகத்திற்கு, எப்போதுமே மறக்க முடியாத தருணமாக நெல்சன் மண்டேலாவின் விடுதலை அமைந்தது. சுதந்திர போராட்ட வீரரான நெல்சன் மண்டேலா, மனைவியான வின்னி அவருடைய பக்கத்தில் சேர்ந்து வர, கையை அசைத்து கொண்டே கேப் டவுனிலுள்ள விக்டர் வெர்ஸ்டெர் சிறையிலிருந்து வெளியே வந்தார்.
தாத்தா என்று அவர் அழைத்து வந்தவர், நாட்டின் நலனுக்காக மாபெரும் தியாகத்தை செய்தவர் என்பதை ஸோலெகா மெதுவாகத்தான் உணர்ந்து கொண்டார்.
தாத்தாவின் கடும் விதிகளும், தடைகளும் இடம்பெற்றதால் வீட்டு வாழ்க்கைச்சூழல் மாறிப்போனது. வீட்டிற்கு வெளியே இனவெறி காலம் முடிவுக்கு வந்து தென்னாப்ரிக்காவும் மாறிபோனது. சில ஆண்டுகளில் ஸோலெகாவின் தாத்தா நாட்டின் முதலாவது கறுப்பின அதிபராக ஆட்சிசெய்ய தொட்ங்கினார்.

பட மூலாதாரம், WALTER DHLADHLA/AFP/Getty Images
இந்நேரத்தில் தான் தென் ஆப்ரிக்காவில் அசாதாரண நம்பிக்கையும் மாற்றமும் ஏற்பட்டன.
ஆனால் ஸோலெகாவின் தனிப்பட்ட வாழ்க்கையில் நிகழ்ந்த அனைத்தும் வேறுபட்டவையாக இருந்தன. அவர் சிறுமியாக இருந்தபோது, பாலியல் தாக்குதலுக்கு உள்ளாக்கப்பட்டார். அது முதல் அவருடைய வாழ்க்கையில் கடினமாக நிகழ்வுகள் சங்கிலி போல தொடர்ந்தன.
மதுப் பழக்கத்தால் ஆட்கொள்ளப்பட்ட அவர் போதை மருந்துக்கும் அடிமையானார். அவருடைய இரண்டு குழந்தைகள் இறந்து போய்விட்டன. இவருக்கு புற்றுநோய் என்று இரண்டுமுறை நோய் அறியப்பட்டது.
இப்போது போதை பழக்கத்தில் இருந்து திருந்தியிருக்கும் அவர், அவரது வாழ்க்கையை பாதித்த இந்நிலைமைகளுக்கு எதிராக பரப்புரை செய்கின்ற நபராக சமூகத்தில் உலா வருகிறார்.
பிறரின் நல்வாழ்க்கைக்கு உதவும் முயற்சியாக, அவருடைய உண்மையான வாழ்க்கை கதையை பகிர்ந்து கொள்கிறார்.
பிபிசி அவரை சந்தித்தபோது, 2013 ஆம் ஆண்டு காலமான நெல்சன் மண்டேலா, இப்போதைய ஸோலெகாவை பார்த்து, இந்நேரத்தில் தான் சரியான வாழ்வை பெற்றிருப்பதை தெரிந்து கொள்வார் என்று நம்புவதாக தெரிவித்தார்.

பட மூலாதாரம், BEN STANSALL/AFP/Getty Images
இருண்ட நாட்கள்
குழந்தையாக இருந்தபோதே பாலியல் தாக்குதலுக்கு உள்ளாக்கப்பட்டதை ஏற்றுக்கொள்வது என்பது ஸோலெகாவுக்கும், அவருடைய முழு குடும்பத்தினருக்கும் மிகவும் கடுமையானதாக இருந்தது.
தன்னைத் தானே குற்றஞ்சாட்டிக் கொண்ட ஸோலெகா, உள்ளத்து வலியை மரத்துப் போக செய்யும் முயற்சிக்கான வழிகளை தேடும் நோக்கில் தள்ளப்பட்டார்.
9 வயது குழந்தையாக இருந்தபோது, முதல்முறையாக மது அருந்த தொடங்கினார். 13 வயது சிறுமியாக இருந்தபோது, போதை மருந்து உட்கொள்வது மற்றும் மது அருந்துவதை யதார்த்த நிலைமையில் இருந்து தப்பித்துகொள்ளும் வழிமுறையாக கண்டார்.
21 வயதானபோதுதான், போதை மருந்துக்கு தான் அடிமையாகி இருப்பதை குடும்பத்தில் ஸோலெகா தெரிவித்தார்.
அந்நேரத்தில் அவர் ஸெனானி என்ற பெண் குழந்தையின் தாயாக இருந்தார். ஸெனாமி என்கிற மகன் ஆறு ஆண்டுகளுக்கு பிறகு பிறந்தான்.
"நான் சரியான தாயாக இருக்கவில்லை. என்னுடைய குழந்தைக்கு ஏற்ற தாயாக நான் இருக்கவில்லை" என்று ஸோலெகா கூறுகிறார்.

பட மூலாதாரம், Handout
ஸோலெகா தன்னுடைய வாழ்க்கையின் இருண்ட நாட்களிலும், மன அழுத்தத்திலும் தத்தளித்துக் கொண்டிருந்தபோது தான், அந்த நேரத்தில் 13 வயதாகியிருந்த மகள் ஸெனானி, ஜொகனெஸ்பர்க்கில் நடைபெற்ற 2010 ஆம் ஆண்டு உலக கோப்பை கால்பந்து போட்டியின் தொடக்கவிழா நிகழ்ச்சியை பார்த்துவிட்டு திரும்பும்போது, நிகழ்ந்த கார் விபத்தில் சோகமான முடிவை சந்தித்தார்.
மது மயக்கத்தில் இருந்த கார் ஓட்டுநர், சாலையில் வைக்கப்பட்டிருந்த பாதுகாப்பு தடுப்பணில் காரை மோத, காரில் இருந்து தூக்கி எறியப்பட்ட ஸெனானி சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தார்.
விபத்து நடந்த அதே நாள் இரவில் ஸோலெகா மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார். தற்கொலை செய்து கொள்ள முயன்றதில் இருந்து தப்பித்திருந்த அவர், ஏற்கெனவே 10 நாள்கள் மருத்துவமனையில் இருந்த நிலையில், மெல்ல மெல்ல உடல் நலம் தேறிவந்தார்.
அதுதான், அவருடைய வாழ்க்கையின் மிகவும் இருண்ட மற்றும் வலிமிகுந்த காலமாக இருந்தது.
"கடவுளே என்னை ஏன் எடுத்துகொள்ளவில்லை? நான் தான் போக வேண்டியவள்" என்று கடவுளிடம் தொடர்ந்து முறையிட்டு வந்ததாக அவர் தெரிவிக்கிறார்.
"என்னுடைய குழந்தைகளுக்கு என்னைப் போன்ற ஒரு தாய் வேண்டாம்" என்பதுதான் அவருடைய வேண்டுதலாக இருந்துள்ளது.
அவருடைய குழந்தை இறந்த வேளையில், ஸோலெகா தன்னுடைய வாழ்க்கையில் மிகவும் மோசமானை நிலையை அடைந்திருந்தார்.

பட மூலாதாரம், ERIC FEFERBERG/AFP/Getty Images
புதிய கட்டம்
இந்த விபத்து நடந்து இரண்டு மாதத்திற்கு பிறகு, ஸோலெகா தன்னை மறுவாழ்வு மையத்தில் சோதனை செய்தார். அதுதான் அவருடைய வாழ்வின் புதிய காலக்கட்டத்தின் தொடக்கமாக இருந்தது. ஆனால் இதுவும் சாவல்கள் இல்லாமல் அமைந்துவிட்டது என்று சொல்வதற்கில்லை.
32 வயதான ஸோலெகாவிற்கு மார்பக புற்றுநோய் இருப்பதாக தெரியவந்த்து. பல முறை உயிர் தப்பி பிழைத்திருக்கும் இவருக்கு பெரும் பாதிப்பை தரக்கூடிய நோய் அறிதலாக இந்த தருணம் பார்க்கப்பட்டது.
முதலில், இந்த புற்றுநோயை எதிர்கொள்ள மிகவும் பயந்து, சிகிச்சை பெற அவர் மறுத்துவிட்டார். ஆனால், நாளடைவில் இருமுறை மார்பக அகற்று சிகிச்சையும், கிமோதெரபி எனப்படும் வேதிமுறையில் நோய் அகற்றும் சிகிச்சையும் மேற்கொண்டார்.
சிகிச்சை முடிந்த சிறிது காலத்தில் அவர் கருத்தரித்தார், புற்றுநோய்க்கு பிறகு, குழந்தை பிறக்காது என்று எண்ணியிருந்தவருக்கு, இந்த செய்தி தேனாக இனித்தது.
ஆனால், அவருக்கு பிறந்த மகன் ஸெனாவி குறைமாதத்தில் பிறந்து, சில நாட்களே உயிர்வாழ்ந்தான். மீண்டும் தன்னுடைய ஒரு குழந்தையை அடக்கம் செய்ய வேண்டிய அந்த தருணம் ஸோலெகாவுக்கு மன உளைச்சலைக் கொடுத்தது.

போதை மருந்து மறுவழ்வு மையத்தில் மூன்று ஆண்டுகள் தங்கியிருந்தபோது, தனக்கு மணவுறுதி செய்யப்பட்டிருந்த காங்கோவை சேர்ந்த தியெர்ரி பாஷாலாவை, ஜொகனெஸ்பர்க்கில் ஸோலெகா சந்தித்தார். அவர்களுக்கு ஒரு குழந்தை பிறந்தது. வாழ்க்கையை சற்று நன்றாக உணரத் தொடங்கினார்.
இந்த ஆண்டு ஏப்ரல் மாதத்தில், அவருடைய மார்பகத்தில் புதிய கட்டி இருப்பது கண்டறியப்பட்டது. இப்போது முன்பைவிட மிகவும் தீவிரமாக புற்றுநோய் வந்திருந்தது. ஸோலெகா மனம் நொறுங்கி்ப் போனார். அவரும், தியேர்ரி பாஷாலாவும் இன்னொரு குழந்தை பெற்றெடுக்கலாம் என்று திட்டமிட்டு அவர்களின் வாழ்க்கையை நடத்திக் கொண்டிருந்தபோது, மீண்டும் வேதியியல் முறையில் நோய் அகற்றும் சிகிச்சை பெற வேண்டியதாயிற்று.
இந்த முறை, அவருடைய இந்த வாழ்க்கை பயணத்தை சமூக ஊடகங்களில் ஸோலெகா பகிரத் தொடங்கினார். அதன் மூலம் பிறருக்கு தூண்டுதல் கிடைக்கும் என்றும், தன்னை பார்த்து பிறர் கற்றுக்கொள்வர் என்றும் அவர் நம்பினார்.

பட மூலாதாரம், ALEXANDER JOE/AFP/GettyImages
"இந்த முறை அனைத்தையும் மிக எளிதாக கையாளலாம் என்பது போன்று உணர்கிறேன். இந்த போராட்டத்தை ஏற்கெனவே வென்று விட்ட உணர்வை பெறுகிறேன்" என்று அவர் கூறுகிறார்.
சாலை பாதுகாப்பு பற்றி விழிப்புணர்வு மேற்கொள்ளவும், தன்னுடைய மகளுக்கு மரியாதை அளிக்கும் வகையிலும் அறக்கட்டளை ஒன்றை ஸோலெகா தன்னுடைய பெயரில் நிறுவியிருக்கிறார்.
புற்றுநோய்க்கு விழிப்புணர்வு அளிக்கும் தூதராகவும் அவர் இப்போது செயல்பட்டு வருகிறார்.
"பெண்கள் வெளிப்படையாக பேசுவதும், பரிசோதனை செய்து கொள்வதும், அவர்களுக்கு தேவையான சோதனைகளை மேற்கொள்வதும் முக்கியமானது. உங்களை சாகடிக்கும் முன்னர் புற்றுநோயை சாகடித்துவிடுங்கள்" என்று அவர் கூறுகிறார்.

பட மூலாதாரம், TREVOR SAMSON/AFP/Getty Images
தன்னுடைய தாத்தா நெல்சன் மண்டேலா உயிரோடு இருந்தபோது, தன்னுடைய வாழ்க்கை மூலம் அவரை பெருமைப்படுத்த முடியாமல் போனதை நினைத்து ஸோலெகா வருந்துகிறார்.
"போதை மருந்துகளையும், மதுபானங்களையும் எதிர்ப்பதிலும், என்னுடைய குடும்பத்தினர் மற்றும் மனதிற்கு நெருங்கியோருடன் அதிக நேரத்தை இப்போது செலவிடுகிறேன்.
இறந்த என்னுடைய மகளோடு எனது தாத்தா எங்கிருந்தாலும், வாழ்ந்து கொண்டிருக்கும் எங்களை பார்ப்பார் என்றும், கடைசியாக சரியான பாதையை நான் பெற்றிருப்பதாக எண்ணுவார் என்றும் நம்புகிறேன்" என்பது ஸோலெகா நம்மிடம் சொன்ன கடைசி சொற்களாகும்.
































