ஹாங்காங்: தலைவரை தேர்ந்தெடுக்கும் அமர்வு உறுப்பினர் தேர்தலில் வாக்களிப்பு
அடுத்த தலைவரை தேர்ந்தெடுக்கின்ற அமர்வான ஹாங்காங்கின் தேர்தல் குழுவுக்காக நடைபெறும் தேர்தலில் மக்கள் வாக்களித்து வருகிறது.

பட மூலாதாரம், Getty Images
ஹாங்காங் வாக்காளர்களில் வெறும் 6 சதவீதத்தினரே இந்த தேர்தலில் வாக்களிக்கின்றனர். இதில் வாக்களிக்க அனுமதிக்கப்பட்டுள்ளோரில் பெரும்பாலோர் சீனாவுக்கு ஆதரவாக இருப்போராக பார்க்கப்படுகின்றனர்.
ஜனநாயகமற்ற வாக்கெடுப்பாக இது விமர்சிக்கப்படுகின்றது. ஆனால் ஜனநாயக ஆதரவு குழுக்கள் முன்பைவிட அதிக வேட்பாளர்களை தேர்தல் களத்தில் இறக்கியுள்ளன.
இந்த அமைப்பை எதிர்ப்பதாக கூறுகின்ற அவர்கள், இந்த அமைப்பின் உள்ளிருந்து கொண்டே போராடப்போவதாக கூறுகின்றனர்.
திங்கள்கிழமை காலை முடிவுகள் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

பட மூலாதாரம், Getty Images
முன்னாள் பிரிட்டிஷ் காலனியான ஹாங்காங்கில் மிகவும் பதட்டமான நிலையில் இந்த வாக்கெடுப்பு நடைபெறுவதாக பிபிசியின் ஹெலியர் சேயுங் கூறியிருக்கிறார்.
சிறப்பு உரிமைகள் மற்றும் சுதந்திரத்தை பெற்றிருப்பதாக கூறி, 1997 ஆம் ஆண்டு உடன்பாடு ஒன்றின் மூலம் சீனாவுக்கு ஹாங்காங் வழங்கப்பட்டது.
ஆனால், சீனா ஹாங்காங்கின் உள்விவகாரங்களில் செல்வாக்கு செலுத்துவதாக அவர் தெரிவிக்கிறார்.
ஹாங்காங்கின் ஜனநாயக ஆதரவு சட்டமன்ற உறுப்பினர்கள் பலரை தகுதி நீக்கம் செய்ய வேண்டும் என்று சீன அரசு நீதிமன்றத்தில் வழக்கு தொடுத்திருக்கிறது
இந்நிலையில், குடும்ப காரணங்களை முன்னிட்டு அடுத்தாக போட்டியிடப் போவதில்லை என்று தற்போதைய தலைமை செயலதிகாரி ச்சுன்-இங் லியுங் கூறியிருக்கிறார்.
ஹாங்காங் மக்களின் நலன்களை விட சீனாவின் நலன்களுக்கு முதன்மை அளித்ததாக ஜனநாயக ஆதரவாளர்களால் அவர் அடிக்கடி விமர்சிக்கப்பட்டுள்ளார்.
லியுங் பதவியேற்ற இரண்டு ஆண்டுகளில், 2014 ஆம் ஆண்டில் நடைபெற்ற மாபெரும் ஜனநாயக ஆதரவு பேரணி, தலைமை செயலதிகாரியிடம் இருந்து அல்லது சீனாவிடம் இருந்து எந்தவொரு சலுகையும் பெறுவதற்கு தவறிவிட்டது.
































