மொசூலில், ஐஎஸ்சுக்கு எதிராக முன்னேறும் இராக் ராணுவம்
மொசூலில், இஸ்லாமிய அரசு என்று தங்களை அழைத்துக்கொள்ளும் அமைப்பினர் மீது புதிய தாக்குதல்களைத் தொடங்கிய பிறகு, தனது படைகள் முன்னேறுவதாக இராக் ராணுவம் தெரிவித்துள்ளது.

பட மூலாதாரம், Getty Images
இராக் ராணுவம் முதலில் மொசூல் நகரத்தின் கிழக்கு புறநகர்ப் பகுதிக்குள் நுழைந்த போது, மிகவும் கடுமையான எதிர்ப்பைச் சந்தித்தது. சமீப வாரங்களில் இந்தச் சண்டையில் ஒரு தொய்வு ஏற்பட்டிருந்தது.
ஆனால் மீண்டும் படைகள் வலுவாகியுள்ளன என்றும் படையினர் பல்வேறு முனைகளில் முன்னேறுவதால், ஒரு புதிய தாக்குதல் தற்போது நடைபெறுகிறது என்றும் ராணுவம் குறிப்பிட்டுள்ளது.
இராக்கில் தீவிரவாதிகளின் கட்டுப்பாட்டில் இருந்த கடைசி பெரிய நகரம் மொசூல் நகரம்.
எதிர்படையினர் பாதுகாத்துக் கொள்ள மிக விரிவான ஏற்பாடுகள் செய்துள்ளதாகவும், ராணுவ படைகள் எல்லா தெருக்கள் மற்றும் பாதைகளிலும் சண்டையிட வேண்டியிருந்தது என்றும் ராணுவத்தினர் தெரிவித்துள்ளனர்.




























