ரஜினி, அதிமுகவுடன் கூட்டணியா? - பிரதமர் நரேந்திர மோதி அளித்த பதில் - மற்றும் பிற செய்திகள்

பட மூலாதாரம், Hindustan Times
ரஜினி, அதிமுகவுடன் கூட்டணியா? - பிரதமர் நரேந்திர மோதி அளித்த பதில்
மக்களுடன் வைக்கும் கூட்டணிதான் வெற்றிகரமான கூட்டணி என இந்திய பிரதமர் நரேந்திர மோதி கூறி உள்ளார்.
பாரதிய ஜனதா கட்சி செயற்பாட்டாளர்களுடன் வீடியோ கான்ஃபரன்ஸிங் வழியாக நேற்று (வியாழக்கிழமை) உரையாற்றினார் நரேந்திர மோதி. இதில் அரக்கோணம், தருமபுரி, கிருஷ்ணகிரி, கடலூர் மற்றும் ஈரோடு ஆகிய பகுதிகளை சேர்ந்த பா.ஜ.க உறுப்பினர்கள் கலந்து கொண்டனர்.
அதில் அரக்கோணம் பகுதியை சேர்ந்தவர் கேட்ட கூட்டணி குறித்த கேள்விக்கு கூட்டணிக்கான நமது கதவுகள் திறந்தே உள்ளன என பதில் அளித்து உள்ளார்.
'ரஜினிவுடன் கூட்டணி'
ரஜினி, அதிமுக ஏன் திமுகவுடன் கூட பா.ஜ.க கூட்டணி வைக்க உள்ளது என்பது போன்ற செய்திகள் உலவுகின்றவே என்ற கேள்விக்கு மோதி சிரித்தப்படி பதில் அளிக்க தொடங்கினார்.
அவர், "இருபது ஆண்டுகளுக்கு முன்பு வாஜ்பேயி வெற்றிகரமான கூட்டணி அரசியலை முன்னெடுத்தார். அதுவரை காங்கிரஸ், மாநில கட்சிகளின் அபிலாஷைகளுக்கு செவிசாய்க்காமல் இருந்தது. அவர்களை மிக மோசமாக கூட நடத்தியது. திமிர்தனத்துடன் நடந்து கொண்டது. ஆனால், தேசிய ஜனநாயக கூட்டணி மாநில கட்சிகளை மதித்தது" என்றார்.

சிந்து சமவெளி காலத்து கல்லறைகளில் கண்டெடுக்கப்பட்ட ஜோடி எலும்புக்கூடுகள்

பட மூலாதாரம், VASANT SHINDE
உலகின் பழமையான நகர்புற நாகரிகங்களின் ஒரு பகுதியில் சுமார் 4,500 ஆண்டுகளுக்கு முன்னர், ஓர் ஆணும் பெண்ணும் ஒரே கல்லறையில் ஒன்றாக புதைக்கப்பட்டது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
சிந்து சமவெளி நகரத்தில் இரு அரிதான எலும்புக்கூடுகளைஇந்தியா மற்றும் தென் கொரியாவின் தொல்பொருள் ஆராய்ச்சியாளர்கள் மற்றும் விஞ்ஞானிகள் 2016ஆம் ஆண்டு கண்டுபிடித்தனர் - தற்போது ஹரியானாவில் உள்ள ரகிகர்ஹி என்ற கிராமத்தில் உள்ளது அந்த இடம். கடந்த இரண்டு ஆண்டுகளாக "காலவரிசை" மற்றும் அவர்களின் இறப்பிற்கு பின்னால் இருக்கும் சாத்தியமான காரணங்கள் குறித்து அவர்கள் ஆராய்ச்சி செய்து தற்போது அதன் கண்டுபிடிப்புகளை சர்வதேச சஞ்சிகை ஒன்றில் வெளியிட்டுள்ளனர்.
"அந்த ஆணும் பெண்ணும் ஒருவருக்கு ஒருவர் எதிரெதிரே நெருக்கமாக அமர்ந்திருந்தனர். அவர்கள் ஜோடியாக இருந்தார்கள் என்று நம்பப்படுகிறது. மேலும், இருவரும் ஒரே நேரத்தில் இறந்திருக்கக் கூடும். ஆனால், எப்படி இறந்தார்கள் என்பது மர்மமாக உள்ளது" என்கிறார் இந்த ஆராய்ச்சியாளர்கள் குழுவை தலைமை தாங்கிய தொல்பொருள் ஆராய்ச்சியாளர் வசந்த் ஷிண்டே.

சிபிஐ இயக்குநர் பொறுப்பில் இருந்து அலோக் வர்மா நீக்கம்

பட மூலாதாரம், Getty Images
சிபிஐ இயக்குநர் பொறுப்பில் இருந்து அலோக் வர்மா நீக்கப்படுவதாக பிரதமர் நரேந்திர மோதி தலைமையிலான நியமனங்களுக்கான அமைச்சரவை குழு தெரிவித்துள்ளது.
அவர் தீயணைப்புத் துறையின் தலைமை இயக்குநர் பதவிக்கு மாற்றம் செய்யப்பட்டுள்ளார் என்று அந்த அறிக்கை மேலும் தெரிவித்துள்ளது.
சி.பி.ஐ-இன் பொறுப்பு இயக்குநராக, இணை இயக்குநராக இருந்த நாகேஸ்வர ராவ் மீண்டும் தற்காலிகமாக நியமிக்கப்பட்டுள்ளார்.
அலோக் வர்மா நீக்கம் குறித்து கருத்து தெரிவித்துள்ள காங்கிரஸ் கட்சி, தன் மீதான விசாரணைக்கு அஞ்சியே இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது என்று கூறியுள்ளது.
இந்நிலையில், தன் மீதான வழக்கை ரத்து செய்யக் கோரி சிபிஐ சிறப்பு இயக்குநர் ராகேஷ் அஸ்தானா தாக்கல் செய்திருந்த வழக்கில் இன்று (வெள்ளிக்கிழமை) டெல்லி உயர்நீதிமன்றம் தீர்ப்பளிக்க உள்ளது.
விரிவாக படிக்க:சிபிஐ இயக்குநர் பொறுப்பில் இருந்து அலோக் வர்மா நீக்கம்

"தமிழ் மக்களுக்கு இனி அநியாயங்கள் நடக்கக்கூடாது" - சம்பந்தன்

பட மூலாதாரம், ISHARA KODIKARA
மாகாண நிர்வாகத்தில் தமிழ் மக்களுக்கு கடந்த காலங்களில் அநியாயங்கள் இடம்பெற்றதாகவும், அவ்வாறான அநியாயங்களும் எதிர்காலத்தில் நடந்துவிடக் கூடாது எனவும் இலங்கை கிழக்கு மாகாணத்தின் புதிய ஆளுநர் எம்.எல்.ஏ.எம். ஹிஸ்புல்லாவிடம், தமிழ் தேசியக் கூட்டமைப்பின் தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான இரா. சம்பந்தன் கேட்டுக் கொண்டார்.
கிழக்கு மாகாண ஆளுநராக நியமிக்கப்பட்டதன் பின்னர், தமிழ் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் சம்பந்தனை, இன்று வியாழக்கிழமை ஹிஸ்புல்லா கொழும்பில் சந்தித்தார்.
இதன்போது எந்தவொரு இனத்துக்கும் பாதிப்பு ஏற்படாத வகையில் இன, மத வேறுபாடுகளுக்கு அப்பால் நீதியாகவும், நேர்மையாகவும் தனது பணிகளை முன்னெடுக்கப் போவதாக, சம்பந்தனிடம் ஆளுநர் ஹிஸ்புல்லாஹ் தெரிவித்தார்.
விரிவாக படிக்க:"தமிழ் மக்களுக்கு இனி அநியாயங்கள் நடக்கக்கூடாது"-சம்பந்தன்

ஜிம்பாப்வே முன்னாள் அதிபரிடமிருந்து களவாடப்பட்ட பணப்பெட்டி

பட மூலாதாரம், Reuters
ஜிம்பாப்வே முன்னாள் அதிபர் ராபர்ட் முகாபேவிடமிருந்து 1.5 லட்சம் அமெரிக்க டாலர்கள் கொண்ட பணப்பெட்டியை களவாடியதாக குற்றஞ்சாட்டப்படும் மூன்று பேர் அந்நாட்டு நீதிமன்றத்தில் ஆஜராகினர்.
குற்றஞ்சாட்டப்பட்டுள்ள மூவரும் இணைந்து புதிய கார்கள், வீடுகள், விலங்குகளை வாங்குவதற்கு அந்த பணத்தை செலவிட்டதாகவும் கூறப்படுகிறது.
குற்றஞ்சாட்டப்பட்ட மூன்று பேரில், முகாபேயின் உறவினரான கான்ஸ்டானியா முகாபேவும் ஒருவர் என்று அந்நாட்டு அரசு ஊடகம் செய்தி வெளியிட்டுள்ளது.
ஜிம்பாப்வேயின் தலைநகர் ஹராரேவுக்கு அருகிலுள்ள முகாபேவுக்கு சொந்தமான வீட்டின் சாவிகளை அவர் வைத்திருந்ததாக கூறப்படுகிறது.
பிற செய்திகள்:
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்:
- ஃபேஸ்புக் : பிபிசி தமிழ் ஃபேஸ்புக்
- டிவிட்டர் : பிபிசி தமிழ் ட்விட்டர்
- இன்ஸ்டாகிராம் : பிபிசி தமிழ் இன்ஸ்டாகிராம்
- யு டியூப் : பிபிசி தமிழ் யு டியூப்
































